அவர்கள் என்னை
துவேஷம் கொண்டு ஆழமாக
தேடிக்கொண்டிருந்தபோது
நீ கண்டறிந்தாய்
என்னிடம் உன்னை.
உன் சதி வலையிலும்
கண்களும் இதயமும் சிக்கியிருந்தன.
கொள்கையும் பதற்றமும்
திருகிக் கொண்டிருந்த
முரட்டுப் பகலில் நமது
உரையாடல்கள் துவங்கியது.
விதை போன்ற இரவுகளில்
அவை தொடர்ந்தன.
மரணத்தின் நாக்கு உனது.
அது காலத்தை பிளந்து
உயிரை ஈர்க்கும் வணிகம் செய்யும்.
நிலம் அதிரும் போக்குகளில்
உனது நாளை துவக்குவாய்.
தன்னையே முட்டிக்கொல்லும்
பெரும் விஷத்தின் முத்தம் நீ.
பேசிக்கொண்டிருந்தோம்.
நீலம் பாரித்த கடவுள்
நம்மிடையே தோல்வியுற்று
எங்கோ மறைந்தான்.
அவர்கள் நாளையேனும்
என்னை கண்டறிவர்.
நீ விரும்பியதை பேசு.
சபிக்கப்பட்ட மனதுடன் வாழும்
ஒரு எந்திர நாய் போல்…
இறந்த காலத்தில் ஒரு
மண் விளக்கின் ஒளியாய்
சமைந்து
அவ்வனைத்தும்
நான் கேட்டு கொள்கிறேன்.
நீலம் பாரித்த கடவுள் போல். என்றால் என்ன?
LikeLiked by 1 person