கிழிசல் கனவுகள்


கனவுக்குரியது என்று
அகம் புறம்
முன் பின் புறங்கள் உண்டா?
அது
தூக்கத்தில் நொதிக்கும்
துக்கமோ காமமோ…

கனவு
ஒரு வாழ்வினை
பெய்வது போலவோ
பிய்ப்பது போலவோ
உழன்று கொண்டிருக்கிறது.

படுக்கை அறையில்
போர் நிகழ்த்தி படர்ந்தது.
அதன் குரல்கள் தெளிவில்லை.
ஒளி குன்றிய காட்சிகள்.

நான் இருக்கவேண்டிய இடத்தில்
நாம் இருந்தோம்…
இதுதான் குரூரம் என்று
நீ சொன்னபோது
உனக்கும் அக்கனவு
வந்திருக்கலாமென நினைத்தேன்.

அப்போது நீ தனியே
உன் வாய் இசைக்கவும்
பாடல்கள் கேட்டபடியும்
மீன் பிடித்து கொண்டிருந்ததை
நான் அறிந்து கொண்டேன்.

பிறகு எப்படி கூற முடிந்தது?
உன்னால் கூற முடியும்.
நீ கனவுகளில் வாழ்பவள்.
நானோ காரணங்களில்.

அடுத்த கனவுக்குள்
நீ கொலைபுரிந்த
புன்னகைகள் தெரியலாம்.

அப்போது….
ஏதுமறியாதவளாய் வானத்தை
பார்த்து கொண்டிருப்பாய்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.