28. பெண்மை உடைக்கும் படை


நிவோனி, உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று கேட்டாள் இளவரசி.

Clitoridectomy or clitorectomy. FGM.

ஆம். சின்ன துண்டு பிளேடால் நீதிமுத்து கிளிட்டோரிஸை கிழித்து அதை அவன் சிதைத்து விட்டான்.

எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட உணர் நரம்புகளுடன் முடிச்சிட்டு மூளையோடு மனதோடும், மனதிலாடும் கனவோடும், பேரின்ப தொடர்பு கொண்டிருக்கும் அந்த ஒரு இன்ச் அளவான சின்னஞ்சிறு உணர்வூட்டும் மத்தாப்பை நொடிகளில் நீதிமுத்து போதையில் பட்டாம்பூச்சியை கசக்கி கையால் கிழித்து கொல்வது போல் கொன்று முடித்திருந்தான்.

பின் ஹாஸ்பிடலில் சேர்ந்து சரி செய்ய முடியாமல் முழுமையாக நீக்கி… நான் அரை உயிராக பிழைத்து…

சற்று அமைதியாக இருந்த இளவரசி பின் மீண்டும் பேசலானாள்.

என் புருஷனுக்கு வளர்மதியோடு இருந்த தொடர்பு தெரிய வந்தபோது அதை மட்டும் என்னால் சகிக்க முடியவில்லை.

நாளெல்லாம் பல சண்டைகள். பொது இடம் உறவுகள் திருமணம் திருவிழா என்றெல்லாம் அவனுக்கு கணக்கே இல்லை.

அவன் மனதில் என்ன காழ்ப்பு தோன்றுகிறதோ அதை வன்மமாக பேச ஆரம்பித்தால் உடனே சண்டைதான்.

அப்படி கழிந்த ஒருநாளில்தான் வனக்குயிலை நான் பார்க்க அப்படியே அவளுடன் கிளம்பி வந்துவிட்டேன் என்றாள்.

நிவோனி, ஒரு ஆண் காதலை வடிகட்டி காமத்தை மட்டுமே சார்ந்திருக்கும்போது அபத்தமானவன்.

அவன் பெண்களை திருகும் ஒரு சாவி. அவன் பாலியல் கர்வத்தில் அவளை எப்போதும் ஆள்வதற்கு நினைக்கிறான்.

ஒவ்வொரு முறையும் அவன்தான் தோல்வியை சந்திக்கிறான். ஒரு பெண் அவனை வெற்றி கொள்கிறாள்.

அவள் தன் உச்சத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டு அதன் பின்னரே அவனுக்காக அவள் காத்திருக்க ஆரம்பிக்கிறாள். இதை ஒரு  ஆணால் பொறுக்க முடியவில்லை. நான் இதைத்தான் ஆண்த்தனம் என்கிறேன்.

எனக்கு காம இன்பங்கள் கிடைக்காது. ஆனால் எந்த ஆணும் என்னிடம் வீழ்ந்தே ஆகவேண்டும். அவர்களின் அந்த நீண்ட தவிப்பு நீதிமுத்துவின் தவிப்பு என்றாள்.

உங்கள் இருவருக்குமே உளவியல் சிக்கல் இருக்கலாம் அல்லவா என்றான் நிவோனி.

பாலியலே உளவியல் சிக்கல்தான்.  உடலால் உடலை தோற்கடிக்க போராடும் அந்த நிகழ்வில் ஆண் பெண் என்ற இரு நிலை இருக்க வாய்ப்பு இல்லை.

நான் ஒரு முறை மூன்று ஆண்களோடு ஒரே நேரத்தில் முயற்சி செய்தேன். ஆனால் அவர்கள் பின் வாங்கி விட்டனர்.

ஏன்?

ஆசை.

உடல் மீதான ஆசைகள் மனதை பாதி கலவியில் குழப்பி விடும். சிந்தனைகள் தோன்ற ஆரம்பிக்கும்.

ஒரு மனிதனுக்கு சிந்தனைகள் மிக தீவிரமாக இருக்கும்போது பாலியல் என்பது அனுபவம் அல்ல. அது ஒரு வேலை, உடலோடு முட்டி முட்டி மூச்சு விடும் வேலை என்று சிதைந்து போகும்.

அப்படியெனில்?

அன்பு காமமாக பரிமாணம் கொள்ள நீண்ட பொறுமை தேவை. அதை தூண்டி விட கூடாது. தூண்டினால் தடுமாற்றம் வரும். தடுமாறினால் ஈகோ விழிக்கும்.

காமம் சம அளவில் வேகம் எய்தும்போது மொழி அறிவு சிந்தனை ஈகோ எல்லாம் மறைந்து விடும். ஊடல் மிக சுகமாகும்.

புரிகிறது என்றான் நிவோனி.

இல்லை. நீ ஆண். உனக்கு புரியாது. ஆனால் புரிந்தது போல் நடிப்பாய்.

நீ எப்படி அதை சொல்கிறாய்?

நீ என்னை பார்த்த கணத்திலேயே எனது தொடைகளை ஆர்வமாய் ரசித்தாய் அல்லவா என்று கேட்டபோது நிவோனிக்கு எங்கோ குத்தி வலித்தது.

நிவோனி, கேத்ரீன் பற்றி தெரியுமா உனக்கு?

யார் அவள்? என்று கேட்டான் நிவோனி, இளவரசியிடம்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.