முயற்சித்தாலும்
இந்த நள்ளிரவை கடக்க
என்னால் இயலவில்லை.
மூச்சடக்கிக்கொண்டு
மரணம் உற்றுப்பார்க்கிறது.
சபிக்கப்பட்ட கூச்சலொன்றை
தெருமுனையிலிருந்து
கேட்கும் பொழுதில்தான்
தாகம் எடுக்கிறது.
துயில் தன்னைத்தானே
போற்றி வழிபட்ட
கந்தல் துணியென தொங்குகிறது
அந்நகத்தின் கூர் நுனியில்.
அசையும் உடலிலிருந்து
வெளிக்கிளம்பும் நான்..
மஞ்சள் கனவொன்றிலிருந்து
விழித்து துள்ளி நிற்கும்
கிழட்டு உடும்பொன்றினை
தாண்டத்தெரியாது நிற்கிறேன்.
உடலிலிருந்து உயிர்க்கும்
கனவிலிருந்து துயருக்கும்
ஆழ்ந்த தொடர்பில் இருந்தும்…
பொருந்திச்செல்லாத
கயிற்றொன்றில் ஊறும்
எறும்பென.