களைத்த
அதிகாரியை போன்று
எனது அறைக்குள்
வரும் அப்பூனை
மோப்பமுற்று தேடுகிறது
அதன் நிழல்களை.
காணாது கலக்கமுற்று
வெளியேறும்
பூனையின் நிழல்களை
நினைவுகளாக்கி
சுமக்குமென் மனதுக்குள்
அந்த பூனையை – அது
இல்லாத பொழுதுகளிலும்
நான் பார்க்கிறேன்.
அந்த
மனப்பூனை
என்னை பார்க்கும்போது
அதன் மனதுக்குள்
அறை விளக்கொளியில்
சிமிண்ட் சதுரத்தில்
கோணலாய் நெளியும்
எனது நிழலோடு
விளையாடி திரியலாம்.
அந்தப்பூனையின்
மனதில்தான்…
அறையென்று
எதுவிருக்கும்?
நானென்று
யாரிருப்பர்?
அடர் இரவுகளில்
எங்கள் கண்கள்
சந்திக்கும் போதெல்லாம்
பூனை பயத்திலும்
நான் பிரியத்திலும்…
நிழலின் வெப்பம்
தாளாது சுருள்கிறோம்
அவரவர் மனதில்.
You must be logged in to post a comment.