எனது புத்தகத்தில்
அந்த இசை இருந்தது.
அந்த இசைக்குள்
கடல் மழை பெய்தது.
கடல் மழையில்
நனையும் பவித்ரா
என் புத்தகத்தில்
சொற்களால் அதிர்ந்து
வரிகளாக விரிந்தாள்.
எல்லா வரிகளிலும்
பவித்ரா இடி கொண்டு
துடுப்புகள் இட்டாள்.
ஒரு மீன் குஞ்சின்
இறுதி மூச்சினை
அவள் கண்களில்
பொதித்தேன்.
வானம் நீல நிறத்தில்
நகைத்தது.
நாங்கள் கலந்தோம்.
அவள் பருகிய
வெண்ணிற எனது உயிரின்
காலத்துடிப்பு
அலமாரிக்குள் வைத்த
கடிகார ஒலியாக
கடலின் மனதுக்குள்
கேட்கிறது என்றாள்.
நதியும் கடலுமாய்
பிணைந்த நாங்கள்
இரவை உறிஞ்சி
பகலை வெளியிட்டோம்.
ஒரு கவிதையை
ஒரு கவிதை எழுத
அவள் யோனிக்குள்
பிரபஞ்சத்தின்
அனல் கசிந்தது.
அன்று முதல்…
பருவ காலங்களின்
கண்ணசைவை மீட்டி
அவள் ஸ்வரத்தில்
உருகிய என்னையும்
ஒரு புத்தகமாக்கி
தனியே
வாசிக்கிறாள்.
அவள் ஒரு குருவியாக முடிந்தால்…
பின்னர்தான்
அவள் வருந்தினாள்.
அழுதாள்.
விழி துடைத்து
சற்றே வெட்கமுற்று
தன் ஆணவத்தை
மீண்டும் அணிந்தாள்.
விலகி சென்று விடு
என் குரல் எனக்கு
கேட்கவில்லை. நாம்
பிரிவோம் என்றாள்.
ஒரு ஒளி
அவளை கீறியபோது
ஒரு ஒளி காயத்தில்
மருந்திட்டது.
அவள் தன் நினைவை
பொசுக்கியபடிதான்
அறையெங்கும் நீளமாய்
நடந்து தவித்தாள்.
உறக்கம் நொடித்த
அவள் கண்களிலிருந்து
மௌனம் வெளியேற
தன் துக்கத்தை நோக்கி
வசைபாடினாள்.
என்னருகே வந்தாள்.
பிரிவை கொடு.
என்னை சீண்டு.
முள் கொண்டு தாக்கு.
ஒரு பறவையை ஏன்
கிழித்து பார்க்கிறாய் என்றாள்.
என் தோட்டம்
வெறும் செடிகள்
வெறும் மலர்கள்
வெறும் கொடிகள்
வெறும் இலைகள்
மட்டுமே கொண்டவை.
நீதான்
இசையை நிரப்பினாய்.
வாசனை பரப்பினாய்.
நீரில் சுவை கூட்டினாய்.
மண் மணக்க செய்தாய்.
என்
ஆன்மா கரி பிடித்தது.
நீ விலகும்போது
என் இருள் என்னை
சூழும்போதுதான் நான்
உயிர்க்க முடியும் என்றாள்.
அவள் தன் காதலை
தன் கால்களால் நெறித்து
நசுக்கி கொல்ல
விரும்பினாள்.
அந்த காதல்
ஒவ்வொரு நாளின்
உதயத்திலும் உன்னையே
தேடி வரும் என்றேன்.
இன்றோடு நான்
உன்னை வெறுக்கிறேன்
விலகு என்றாள்.
அவள் அன்று முதல்
என்னை
காதலிக்க துவங்கினாள்.
கோப்பை
என் முன்னே
ஒரு கோப்பை.
கோப்பைக்குள் காஃபி.
சர்வ ரகசியமும் அறிந்த
நீதான் அதனில்
ஆவியாக வெளியேறுகிறாய்.
அந்த நீராவியின்
கொடுங்கோன்மையை
அறிந்த நான்
சருகு போல் துடிக்க
எங்களை
தன்னுள் பிரதிபலிக்கும்
அக்கண்ணாடியில் நீ
மின்னி நகைக்கிறாய்.
நான் காஃபியுள்
ஒரு வாய்ப்பை
முழுக்க தவறவிட்ட
கோழையை போல்
நீந்தி செல்கிறேன்.
குவளை தள்ளாடி
சில துளிகள் தெறிக்க
தரையெங்கும் முளைத்தது
காஃபி செடிகள்.
ஒரு தாவரம் போல்
உன் யோனி அழைக்க
உன் யோனியின் வெயில்
எனக்கு கார்காலம்
என்கிறேன்.
கண்ணாடி வழியே
நீராவி பெருகுகிறது.
அது ஓடையை போல்
தவழ்கையில்
உன்
நிழல் சிவக்கிறது.
கோப்பை மிச்சமின்றி
என்னை பருகுகிறது.
வெளியேறும் திசைகள்
புவியீர்ப்பு விசை குறித்து
ஆழ்ந்து சிந்திக்கும்
கடல் ஆமை மனதாய்
நெகிழும் என் வாழ்வில்
ஒரு நேர்கோடு போட
தவிக்கும் சிறுமியின்
எண்ணங்களில்
சிவப்பு பென்சிலாய்
ஊர்ந்து செல்கிறது
அந்த காதலும்.
அவள் பேசுகையில்
கோள்கள் அதிர்வுறும்
நாதஸ்வரத்தின் மூச்சில்.
அவள் பிரிகையில்
மின்னல் விரிசல்களில்
துவண்டு தளர்கிறது
கார்பன் காதல்.
வெளிச்சத்தில் படிந்து
இரவை உண்ணும்
நகரத்தின்
விளக்கொளியில் நின்று
வகிடெடுக்கும் இரவுக்கு
அவள் வருவதும்
பிரிவதும் தெரிகிறது.
அவ்விரவு அறிந்ததும்
அறியாததும் ஒன்றுதான்.
அவள்
அந்தியின் சாம்பலில்
கடலை தெளித்து
கனவை பொறித்து
உயிரை துடைக்கும்
காய்ச்சல் கொண்ட
அம்பு என்பது.
உயிரிகள்
உயிரை மட்டும்
ஒளித்து வைக்கிறேன்.
அவள்
சொல்ல விரும்புவது
எதுவென்றாலும்
அது என் உயிருக்கு
தெரியக்கூடாது.
புகை வழியே
அவளை பார்க்கிறேன்.
பார்க்கையில் அவள்
ஒடிந்த நிலவொளியால்
யாழ் ஒன்றை தீராது
இசைக்கிறாள்.
அவள் முத்தத்தின்
கதுப்பொன்றில்
நீந்தி களிக்கிறது
புத்தனின் தியானம்.
உயிர் ஒளிந்திருக்கும்
மந்திரச்சிமிழை
அவள் கனவில்
விதைத்து வைக்கிறேன்.
கனவு அவளோடு
கலைகிறது புகையாய்.
பூக்களின் மச்சங்கள்
தொகுத்து தன்
உயிருக்குள் கோலமிடும்
அவள் கைகளை
நனைக்கிறது என் உயிர்
கண்ணீர் விடுத்து.
எப்போதும்போல்
இப்போதும் அலைகிறேன்
மிச்ச உயிருக்குள்
அலையடிக்கும் அவள்
நினைவை உலர்த்தியபடி.
கண்ணாடியின் குரல்
ஒரு திருப்பத்தில்
அவளை பார்த்தேன்.
பின் அவள்
சாலையானாள்.
சாலையில் வெறிதே
பயணம் நீண்டது.
என்னை அவளின்
நிழலும் _ அவளை
மரணத்தின் நிழலும்
ஊடாடி வந்தது.
அவள் நதியாய்
மாறிக்கொண்டாள்.
கடல் புக மறுத்து
வானம் நோக்கி
பாய்ந்தாள்.
அவள் நகரமாய்
ஜொலித்தாள்.
வனமாய் மின்னி
பாலையாய் கொதித்து
மலையாய் அடர்ந்து
பூவாய் மலர்ந்தாள்.
சாலை
நில்லாது நீண்டது.
வழியெங்கும் அவள்
பேச்சுக்குரல்.
ஒலிக்குள் மிதந்தது
ஆழியின் பெருமூச்சு.
அவளின்
இதயத்தின் துடிப்பு
காதுக்குள் கேட்டது.
பின்னர்
பயணத்தை
நிறுத்தி கொண்டோம்.
அவள் அவளாக
வந்து சேர்ந்தாள்.
அன்றுமுதல்
நாங்கள்
நடக்க நேர்ந்தது
எங்களுக்குள் மட்டுமே.
அவள் என்னை
கடக்க நான்
அவளோடு அவளை
கடக்க…
நீண்டதொரு பயணம்.
அவள்
மூச்சுக்காற்று செய்யும்
தந்திரங்கள் அறிந்த
காலம் பிளந்தது.
அணிவகுக்கும்
மரணத்துக்கு ஊடே
அவள் காதல் கொள்ள
மீண்டும் ஒரு சாலைக்குள்
பாதை நீண்டது.
பயணம் என்பதெல்லாம்
அன்றன்று
தொலைந்து
அன்றன்று
முடிவதுதான் என்றாள்.
யாருக்குமற்றதுதான்
எந்த வாழ்வும் என்றாள்.
இக்கவிதையை எனக்கு
அவள் முகம் பார்த்த
கண்ணாடி சொன்னது.
கோப்பர்னிகஸ்
எனது மீசை குறித்து
அவள் கேட்கிறாள்.
அதை ஏன்
முறுக்கி இருக்கிறாய்?
காலத்தின் நரம்பில்
ஒரு வடு விழுந்த மீசை.
மீசைக்குள் அவள்
புகுந்துகொண்டாள்.
அங்கே
எதிர்ப்பட்ட ஒரு கப்பலில்
கோப்பர்னிகஸ் இருந்தான்.
அவளை கண்காணிக்க
தன்னை மறந்து தொடர்ந்து
ஆரம்ப தவறுகளை
செய்து முடித்தான்.
அவள் மீசைக்குள்
அலைந்து திரிந்தாள்.
ஒரு இரவை
தொகுத்தாள். ஒரு
பகலை இழைத்தாள்.
காலத்தின் முகத்தில்
விண்மீன்களை பதித்து
நிலவொளி சாந்தை அள்ளி
பூக்களின் வாசனைக்குள்
புகுத்தினாள்.
அவள் மார்புகளில்
என் மீசை உராய்ந்தது.
கப்பல் தள்ளாடியது.
அலைக்குள் தவறிய
கோப்பர்னிக்கஸ் பின்
மீட்கப்பட்டது யாரால்?
தெரியவில்லை.
மீசையில் வடியும்
அன்னங்கள் அருந்தும்
கனவுலக மது
அவள் மார்புகள் மீது
வடிந்து ஓடின.
அவள் மீசையின்
நுனியில் நின்று
பூமியை வரைந்தாள்.
மறு நுனிக்கு சென்று
என்னை வரைந்தாள்.
ஒருநாள் அங்கிருந்து
வெளியேறி சென்றாள்.
அவளை சங்கப்பாணன்
ஒருவன்
இரவுக்குள் அடைத்து விட
இரவு அவளை
பகலுக்குள்
ஒளித்து வைத்தது.
பகல் அவளை
கடலுக்குள்ளும்
கடல் அவளை
சிப்பிக்குள்ளும்
ஒளித்து வைத்தது.
மழை முதிர்ந்த
ஐப்பசி மாதத்து நாளில்
கடற்கரையோரம்
ஒரு சிப்பி விளைந்தது.
கடற்கரையில்
பொய் மீசைகள்
விற்று கொண்டிருந்த
என்னிடம் வந்து
யாரோ ஒருவள்
நீ உண்மையில் யார்
என்று கேட்டாள்.
கோப்பர்னிகஸ்
எனது பெயர் என்றேன்.
ஒருவனும் ஒருவளும்
அலையும் கடலுக்கு
தெரியாதிருக்கிறது தான்
அலைவது குறித்து.
மௌனப்பூச்சிகள்
என் பெயரில்
உன் பெயரை
ஒட்டிக்கொண்டு பறக்கிறது
கடலலையை விரட்டும்
காற்றை தன் குரலாக்கி.
நீ பேசுவதெல்லாம்
நீயே கேட்கிறாய்
நான் கேட்பதாக நினைக்கும்
நினைவின் கனவிலிருந்து.
நானோ…
நான் எங்கிருக்கிறேன்
என்பதறியாது போனதும்
காற்றுக்குள் தவிக்கும்
கடல் வாசனையின்
காலடித்தடம் தேடி
உன் கனவில் புகுந்து
என் கனவை
தனியே காண்கிறேன்.
என்னிடம் நான் பேச
எதுவுமின்றி போகிறது.
நாம் கடப்பது
கடல் அல்ல காலம்
என சொல்லிச்சொல்லி
கரை எங்கும் புரளும்
துயரமான இக்கடல்.
கடல்மேனியில் ஒட்டாத
மண்ணெல்லாம் திரண்டு
கல்லறையாகி விட்டது
நம் காலத்துக்கு.
பேசலாம்.
எனினும்…
நாம் இனி
எதை பேசினாலும்
யாரை பேசினாலும்
அது நம்மை பற்றியா
என துடிப்பில் அஞ்சும்
மனதை மட்டும்
எந்த கடலில் ஒளிக்க?
நள்ளிரவு மழை
இப்போது மழை.
இந்த
நள்ளிரவில் மழை.
இதை வெறும் தூறல்
என்று கடக்க
மனமின்றி பார்க்கிறேன்.
தெருவில் யாருமில்லை.
ஊர் துயிலில்
லயித்து இருக்கிறது.
எனக்காக என்னிடம்
வானம் பேசுகிறது
என்று நினைக்கிறேன்.
நினைவில்
சாரல் தெளிக்கும் மழை
என்னைப்பார்த்து
புன்னகை செய்கிறது.
மழை
நின்று விடுமுன்
அதன் சப்தத்தில்
கரைந்து நான்
தூங்க கண் மூடுகிறேன்.
மழை ஓசையில்
மண்டிக்கிடக்கும்
என் உயிருக்குள்…
நில்லாது
பெய்து கொண்டிருக்கும்
அவள் நினைவை
யாசகமாய் கேட்கும்
இந்த இரவின் பசிக்கு
அதைத்தவிர வேறு
என்ன நான் தர?
மயான மொழி
ஒரு சொல்
நகரும் பொழுதில்
ஒரு சொல்
திணறும்
ஒரு வரியின்
எதிரெதிர் முனையில்
அவளும் நானும்.
அவள் உள்ளிருக்கும்
என்னை
என் உள்ளிருக்கும்
அவளை
ஒவ்வொரு வரியின்
ஒவ்வொரு சொல்லும்
ஒளித்து வைக்கிறது
என்னிடமிருக்கும் அவளை
அவளிடமிருக்கும் என்னை.
அவள் அவனை
நீங்குகையில்
அது
நான்தான் என்கிறாள்
என்னிடம்.
அச்சொல் நகர்கிறது
மயானம் நோக்கி.
அவன் அவளை
நெருங்குகையில்
அது நீதான் என்கிறான்
அவளிடம்.
அச்சொல் மிளிர்கிறது
வரியில் முத்தாய்ப்பாக.
அவள் சொல்லற்று
மௌனம் கொள்ள
அவன் சொல்லொடு
துயரம் கொள்ள
வரியில் சிக்கி
துண்டாடி நிற்கும்
காதலின் வடுக்களை
வாசிக்கும் நீ இதை
கவிதை என்கிறாய்…
உன்னருகில் இருக்கும்
உன்னவளின் மனதில்
இருக்கும் அவன்
அப்படியா என்கிறான்.
You must be logged in to post a comment.