தன்னை எப்போதும் எதனூடும் ஒப்பிட்டு கொண்டிருக்கும் மனிதன் தன்னை சுயமாய் அளவிடும்போது மட்டுமே தான் தத்துவத்தில் மட்டுமே முளைத்து உயிர் விடக்கூடியவன் என்று நினைத்து கொள்கிறான். இதைத்தான் நான் கண்டுபிடித்தேன் என்று அருணாசலம் மாங்காடு போகும் வழியில் கூறினான்.
நடப்பயணமாகவே நாங்கள் அங்கு சென்று கொண்டிருந்தோம்.
விளக்க முடியுமா என்று கேட்டேன்.
விஞ்ஞானிகள் கூடி இருக்கும் அரங்கத்தில் பொன்னாங்கனுக்கு என்ன பதவி… என்று கேட்டான்.
பொன்னாங்கன் உள்ளூரில் ஸ்வாமி தேரில் ஊர்வலம் வரும்போது தீவட்டி பிடித்து கொண்டு மௌனமாக வருவான்.
அர்ச்சகர் சூடத்துக்கு ஒளி ஊட்டுவது அவன் வேலை. அவன் வாழ்நாள் முழுக்க அதில்தான் கழிந்தது. அப்படி ஒரு வாழ்வை அவனுக்கு இதுதான் உன் வாழ்க்கை என்று தீர்மானித்தது யாரின் குற்றம் என்று அருணாச்சலத்திடம் ஒருநாள் நான் கேட்டிருந்தேன்.
மெய்மையின் தத்துவங்கள் சில நியதிகள் கொண்டு இயங்கும்போது நீயும் தீவட்டி ஏந்த வரலாம் என்றான்.
மனிதன் தன்னை அறிவதற்கு எந்த அவசியமும் இல்லை. அவன் சில முகங்களை சில தகவல்களை சில விபத்துக்களை சில உணர்ச்சி பெருக்கிடும் சம்பவங்களை கேட்டு குறிப்பெடுத்து அவன் வாழ்க்கைக்குள் தேவையான பயங்களையும் எச்சரிக்கைகளையும் குறிப்புகளாக வரைந்து வைத்து கொள்கிறான்.
தடித்த கற்கள் சிற்பங்களைப்போல் தோன்றுவது அவனை ஒருபோதும் துன்புறுத்துவதில்லை. நீ என் மூலமாகவும் நான் உன் மூலமாகவும் அந்த கற்பனைகளை தாண்டி உடைத்துக்கொண்டு வெளியேற விரும்புகிறோம்.
தத்துவம் ஒழுக்கங்களை மட்டும் போதித்து தண்டனைகள் வழங்குவது என்றால் ஒரு பிரபலமில்லாத நீதிபதி அதை செய்யவோ முடக்கவோ முடியுமே என்றேன்.
கவனித்து பார்த்தால் இவற்றின் முழு பின்னணி அதிகாரத்தில் மட்டும்தான் ஊன்றி நிற்கிறது என்றான்.
ஒருவன் நம் மீது காட்டும் அதிகாரத்தில் நம் பங்கும் இருக்கிறது. நம் தேவைக்கு உரியதை பெறும் அளவுக்கு நம் மீது அதிகாரம் பாய்ச்சப்படுவதை அனுமதிக்கிறோம்.
இவை அனைத்தும் முன் பின்னாக எந்த சிந்தனையின் வடிவத்திற்குள்ளும் நாம் பொருந்தி போகவில்லை என்பதையே காட்டுகிறது.
முடிவாக….
அருணாசலம் என்னை பார்த்தான்.
குடும்பம், சுற்றம், அரசியல், சமூகம், கழகம், சங்கம், ஃபெடரேஷன் எல்லாமும் சகதியில் சிக்கி இருக்கிறது.
சகதியில் நடந்து கொண்டே இருப்பதில் பழகிவிட்டால் அதுவும் சுகம்தான் என்றேன்.
நாங்கள் ஒருவர் கையை ஒருவர் இறுக்கி பற்றி கொண்டோம். எதிரில் பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
You must be logged in to post a comment.