எந்த தீர்மானமும் இல்லாமல் அலைந்த அலைச்சலை நான் முடித்து கொண்டு வீட்டுக்கு வரும்போது நடுநிசி.
தரையில் ஆங்காங்கே புத்தகங்கள் சிதறி கிடந்தன. சில காசுகளும் ரூபாய் தாள்களும் கிடந்தன. இவற்றை நேர் செய்துவிட்டு செல்லவும் நேரமின்றி மனமின்றிதான் வெளியேறினேன்.
சௌந்தரபாண்டியன் தன் ஒரு குயர் நோட்டோடு வந்த மதியத்துக்கு பின்தான் இத்தனை அலங்கோலமும் நிகழ்ந்தது.
அவனுக்கு எப்படி புரியவைப்பது என்பது எனக்கு தெரியவில்லை. என் மீதான அன்பின் மிகுதியில் அவன் எழுதி வைத்தது எல்லாம் சட்டென்று நீட்டி விடுகிறான்.
இதை படியேன் என்பது கூட தாங்கி கொள்ள முடியும் என்னால்…
கண் பார்ப்பதை மூளை உதாசீனம் செய்து விடும். இங்கிதமான நடிப்பு கூடும். எழுதியதற்கு ஒரு பதில் கருத்து உடனே வேண்டும் என்னும்போதுதான் சிக்கல் உருவாகிறது. நட்பு முறிகிறது.
அவன் உடம்பெங்கும் கனவுகள் தீப்பொறியாக சிலிர்த்து வெடிக்கிறது.
கண்களும் மனதும் அரை மயக்கத்தில் இருக்கின்றன. காதலும் ஊடலுமே சமூகம் என்னும் அவன் மனமோ கடவுளை நிராகரிப்பது என்பதை பற்றி நினைக்கவே அஞ்சுகிறது.
இந்த உலகை ஆட்டிப்படைக்கும் உயர்ந்த எதிர் சிந்தனை கொண்ட ஒருவனுக்கு மனம் மட்டும் விலங்கால் பிணைக்கப்பட்டு இருக்கிறது.
ஏசுவின் வருகைக்கு முன்பான தத்துவ அறிஞர்கள் பற்றிய சிறுகுறிப்பு புத்தகம் ஒன்றை வாசிக்க கொடுத்தேன்.
அவனோ எதிர்வீட்டு மாசிலாமணியின் முலைகளை நினைத்துக்கொண்டே தனது வாழ்க்கையை கரைத்து கொண்டிருந்தான். அவள் வீட்டுக்கு வரும் கந்துவட்டிக்காரன் சமூக எதிரியாகவும் பூக்காரி சமூக விளிம்பு நிலை உழைப்பாளியாகவும் கேபிள் டீவிக்காரன் கலைகளின் தெய்வமாகவும் உருவகித்து மாசிலாமணியின் அகம் புறமாய் உருகி எழுதிய கதைகளும் கவிதைகளும்….
சௌந்தரம்… இதை படிக்க எனக்கு தெம்பும் தைரியமும் இல்லை என்பதை பலமுறை சொல்லியும் அவன் அதை நம்ப மறுத்து புன்சிரிப்பில் உறைந்து நிற்கிறான்.
தத்துவம் அவன் மற்றும் அவன் சார்ந்த அந்த கூட்டத்தின் மனக்கோணல்களை எப்போதும் பாதித்தது இல்லை.
அது தன்னையே பாதித்து தன்னுள் சிதைந்து தன்னுள் ஆஹ்ருதி பெருக்கி ஜீவனாய் சுடர் விடும் குளிர்ந்த நெருப்பும் சுடும் பனியுமான தேடல்.
அவன் கொடுத்த நோட்டை வாங்கி விட்டத்தில் விட்டெறிந்த போது அத்தனை நிம்மதியாக உணர முடிந்தது. தலையை குனிந்து வெளியேறினான்.
நான் வீட்டை விடுத்து கால் போன போக்கில் சென்று வந்த பேருந்தில்
ஏறிக்கொண்டேன்.
அலைந்து திரிந்து வந்தபோது மனம் நிம்மதியாக இருந்தது. சௌந்திரம் இனி வர மாட்டான் என்பதே நிம்மதியாக இருந்தது.
லூக்ரிடிஸ் எழுதிய புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த நள்ளிரவை பகலாக்கி கொள்ள ஆரம்பித்தேன்.
You must be logged in to post a comment.