இந்த உலகம் என்னை
வாழ
அனுமதித்தபோது
ஓரிருவர் மட்டும்
அனுமதிக்கவில்லை.
ஓரிருவரால் மட்டும்
தடைபடும் இவ்வாழ்வில்
அவளொருத்தியும்.
அவளுக்கு அவளே
சங்கேத மொழியில்
கூறிக்கொள்வதை நம்பி
என் வாழ்க்கையில்
நிழல் காயும் என்னை
மாயக்கண்களுடன்
படம் பிடிக்கிறாள்.
சப்தத்தின் வால் பிடித்து
பயணித்து
கனவுக்குள் கூடு பாயும்
அவள்தான் என்னை
இவன் இரவின்
மந்திரவாதியோவென
முகம் கண்டு
அஞ்சுகிறாள்.
அவள்
நிலம் தூவி அழைக்கும்
வெளி ஒன்றில்
குரலிடும் பட்சியாய்
கானகம் பருகி
மழை பெயர்த்து செல்ல
ஓரிருவரில் ஒருவளின்
குற்றமுறுகிய ஆன்மாவில்
தேவனின் அப்பம்
காய்ந்து கிடக்கிறது.
அவ்வுலகம் என்னை
வாழ பணிக்கையில்
அவள் தருவென
முளைத்து சுடர்உரு கொண்டு
ஒளி சத்தில் மீள்கிறாள்.
பனித்த அவள்
கண்களில் நான்
மதுவாய் வெளியேற
காலம் புகைத்து
குடிக்கிறது எம்மை.