நான் கீழிருந்து இன்னும் சில படிகள் ஏறிச்செல்ல வளைந்து முடியும் ஓரத்தில் அங்கிருக்கும் விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது.
மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் விளக்கின் மஞ்சள் ஒளியால் சூழ்ந்து இருந்தன. அது பார்க்க இருட்டை இன்னும் இருட்டாக்குவது போலவே தோன்றியது.
மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்கள் ஒரு ஆறும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்கள் ஒரு எட்டும் இருந்தன. அதில் அமர்ந்து இருந்த மனிதர்கள் அவரவருடன் தனியே இருந்தனர்.
ரபேசன்.
இந்த நகரின் பிரபலமான மனநோய் மருத்துவர்.
இவர் நண்பர் எனது முதலாளி. அந்த முதலாளி இந்த டாக்டருக்கு கொடுத்த விட்ட ஏதோ ஒரு செய்தியை கொண்டிருக்கும் கவரை கொடுக்க வந்திருக்கும் தூதுவன்.
எனக்கு சம்பளம் உண்டு. பி.எஃப் இல்லை. கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். டாக்டர் ஐயாவை நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.
டாக்டர் வரும்வரை காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருக்கும் அந்த நேரத்து மன உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவளின் வளைந்த செவ்விய இடை வலியின்றி போக்கிவிடும். என்ன ஒரு வளைவு.
கண்களை அங்கிருந்து ஐம்பத்தி சொச்சம் டிகிரியில் வளைக்க ஆஹா… ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறான் அவளின் அப்பன். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்னும் நடுத்தர வர்க்க பொச்சாவாமையை
நானாக போக்கி கொண்டிருக்கும்போதே
உக்காருங்க… சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.
அந்த ‘இடை’ தன் கண்களால் மொத்த கூட்டத்தையும் ஒருமுறை அளந்துவிட்டு எல்லோர் கையிலும் ஒரு டோக்கனை கொடுத்தது.
எனக்கும் வந்தபோது நான் விஷயத்தை சொன்னதும் அந்த ‘இடை’ டாக்டர் வரட்டும் சொல்கிறேன் என்றபடி போய் விட்டது. தப்பு… டோக்கன் வாங்கும் சாக்கில் ஒருமுறை அந்த இடையழகியின் கையை சுடச்சுட தடவி பார்த்திருக்கலாம்…
அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் ஏறத்தாழ பாதி நபர்கள் மனநோய்காரர்கள்.
அந்த நோய் என்ன? என்ன செய்யும்? எப்படி வந்தது? தெரியாது. அதன் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கும் அதன் பின்னணி பூர்வீகம் இப்படி எதுவும் சொல்லப்படாது.
நோயின் உக்கிரத்துக்கும் வேகத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் வண்ண வண்ண மாத்திரைகள் வரை தரப்படும். ஆண்டுக்கணக்கில் சாப்பிட்டு அரைத்தூக்கத்தில் வாழ்ந்து மூளையின் கெமிக்கல்கள் சமனப்படும் வரை வந்து செல்ல வேண்டும்.
இறுதியில் அவர்கள் தங்களுக்குள் தாங்கள் நிம்மதியாய் இருந்த அழகான அந்த உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு மீண்டும் இந்த யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர். சம்பாதிக்கவோ விட்ட இடத்திலிருந்து புணரவோ போகலாம்..
என்னை பக்கத்தில் அமர சொன்ன ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல்தான் இருந்தார்.
வெள்ளை சட்டை. நீல நிறத்தில் பேண்ட். இடது மணிக்கட்டில் பழைய டைட்டன் வாட்ச். அதில் நேருவின் உருவம் போல் ஒரு படம் தெரிந்தது.
கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்டவும், நானொன்றும் பைத்தியம் இல்லையாக்கும் என்று நிறுவவும் கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அந்த இதழை உற்றுப்பார்க்கும் ஒரு முயற்சியை செய்யும் பொழுதில் அவர் புன்னகையுடன் என்னிடம் காட்டினார்.
பழைய நீயூயோர்க்கர் இதழ் அது. ரொம்ப பழையதாக கூட இருக்கலாம். இது மரை கழண்ட கேஸ் இல்லை என்று நேரம் கடத்த என் பேச்சு துணைக்கு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். அதே நேரத்தில் பாண்ட்ஸ் பவுடர் வாசனையுடன் ‘இடை’ வருவதும் போவதுமாய் இருந்தது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.
“இந்த மாகசினை நான் கடந்த இருபது வருடமாக கீழே எங்கும் வைக்காமல் இந்த கைகளில் மட்டும் வைத்திருக்கிறேன் என்றால் உங்களால் அதை நம்பமுடியுமா” என்று புன்னகைத்தார்.
எனக்கு ‘திக்’கென்று இருந்தது.
பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார்? பின் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே சார் பெயரென்னவோ என்றேன் அவரிடம்.
புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.
“பெயரை விடுங்கள்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றார்.
பேசும்போதே பாய்ந்து மேலே விழுந்து பிடுங்கும் லட்சணம் அவரிடம் தெரியவில்லை என்றாலும் பிரச்சனை வந்தால் வாசல் பக்கம் விழுந்தடித்து ஓட ஏதுவான இடத்தில்தான் நாம் வாகாய் அமர்ந்துள்ளோம் என்னும் ரெட்டை தைரியத்தில் அவரோடு நான் தொடர்ந்து பேச முடிவெடுத்தேன்.
உங்கள் பிரச்சினை என்ன? என்றேன்.
நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன் உங்களை நீங்கள் பார்க்கும்போது தெரியும் உங்கள் உருவத்தை பிம்பம் என்றுதானே சொல்வீர்கள்?
ஆம். உண்மையும் அறிவியலும் அதே.
அந்த பிம்பம் அல்லது அந்த பிரதிதான் உண்மையான நீங்கள். ஆனால் கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பமோ யதார்த்த உலகில் இருப்பது போல் உங்களை நம்ப வைக்கிறது. இப்படி ஒரு வலைப்பின்னலில் நீங்கள் சிக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதவண்ணம் உங்கள் மனம் படைக்கப்பட்ட பின்னப்பட்ட ஒன்று என்றார் அந்த நீயூயோர்க்கர்.
ஓ.. அதற்குதான் டாக்டரிடம் வந்தீர்கள் போலும் என்றேன் அப்பாவியாய்.
அது மெல்ல ஒரு புன்னகையை தருவித்து என்னை உற்று பார்த்தது.
ஆம்… அதற்குதான்… ஆனால் என்னுடைய இந்த பிரச்னைக்கு டாக்டரை சந்திக்க போவது நான் இல்லை…
பின், வேறு யார்? என்றேன் நான்.
நீங்கள்… என்று அதிர வைத்தார் அவர்.
நானா…? ஆனால் நான் இங்கே வந்திருக்கும் விஷயம் வேறு ஒன்றுக்கு. எஜமானனின் கட்டளைக்கு பணிந்து வந்திருக்கிறேன். இன்னும் விவரமாக என் நோக்கம் ஒரு செய்தி தொடர்பான ஒன்று. நான் ஒருவரின் தூதுவன் என்று கித்தாப்பாக முடித்தேன்.
ஆம்… நாம் தூதுவர்கள் மட்டுமே. ஏனெனில் இங்கு உண்மையான நிலையான ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு. அது நீங்கள் என்பது நான் மட்டுமே அதுபோல் நான் என்பதும் நீங்கள்தான் என்றார்.
இது ஒரு வினோதமான ஆள். அவர் மனம் நோகாது அன்பாய் பேசிவிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் கூட டாக்டர் வரலாமே… நீயூயோர்க்கர் பையில் பச்சை கலர் டோக்கன் அட்டை இருந்தது.
எப்படி சார் என்று அவரிடம் அப்பாவியை போல் கேட்டேன். இடை எதிர்த்த சேரில் அமர்ந்து இடது கையை தூக்கியபடி குமுதம் படிக்க என் உடம்பில் ரத்தம் பாய்ந்தது. 32?
காரணங்கள் என்பது ஒரே நிலையாய் இருப்பது உண்டா? இது நீயூயோர்க்கர்.
இல்லை. இது நான்.
தத்துவம், சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், தர்மங்கள், ஒழுக்கம், நாகரீகம் இப்படி எதுவும் மனிதர்களுக்கு நிலையானது அல்ல மேலும் இடத்துக்கு இடம் காலந்தோறும் மாறும். சரியா?
ஆம் என்றேன். வாசலை பார்த்தபடி.
அதுபோல் தங்கள் வாழ்நாளில் ஒரு குறுகிய நேரத்தில் மனிதர்கள் தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு விடுவார்கள்.
அதன்படி இப்போது நீங்கள் என்பது நான் என்று அவர் சொல்லி முடித்தபோது இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.
உங்களால் இதற்கு ஆதாரம் தர முடியுமா?
இன்று நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம் என்று உங்களால் ஆதாரம் தர முடியுமா என்றார் நீயூயோர்க்கர்.
நாம் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களிக்கிறோம்.
போதுமா?
வேறு?
உங்களுக்கு ஏற்படும் அல்லது உருவாக்கப்படும் நியாயமான சிக்கலை, தொந்தரவை சீர் செய்ய எத்தனை விதமான அலைச்சல்களில் உயிர் விட வேண்டி இருக்கிறது? எத்தனை மன்னர்களை பணத்தை கொண்டும் பல்ளிளிப்பை காட்டியும் யோனியால் உபசரித்தும் நாம் வணங்க வேண்டிய நிலை?
அப்போது எனக்கு நீயூயோர்க்கர் கொஞ்சம் விஷயமுள்ள ஆள்தான் என்று பட்டது.
அந்த ஆள் ஒருவேளை நீ நான் என்று குழப்பிவிட்டு மெஸ்மரைஸ் செய்து ஆதார் உள்பட அனைத்தும் கேட்டு விடுவாரோ என்ற பயம் வந்தது. நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.
இதனால் என்ன செய்யலாம்? என்னதான் செய்ய முடியும்? என்றேன்.
ஒன்றும் இல்லை. ஒரு தகவல் மட்டுமே இது சொன்னேன் என்று பெருமூச்சு விட்டார்.
நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்கள்தான் நாம். நாம் உண்மையில் அடுத்தவருக்கு மட்டுமே வாழ்கிறோம். இதை சொல்லி புரிய வைப்பதற்கு முன்பே என்னை பலவந்தமாக இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டனர் என்றார்.
அதுவும் நல்லதுதானே என்று சொல்லவும் அவர் முகம் சற்று மாறி விட்டது.
டாக்டரிடம் நீங்கள் என்ன விசயமாக வந்து உள்ளீர் என்றார் நீயூயோர்க்கர்.
மீண்டும் வந்த விஷயத்தை சொன்னேன்.
நீங்கள் அப்போது உங்கள் எஜமானன் வடிவில் வந்து உள்ளீர்கள்… ஆனால் நீங்கள் வரவில்லை என்பது ஒரு தர்க்கத்தில் சரியா என்றார்.
ஓரளவு சரியாய் பட்டது. அது சரிதான்.
இப்போது முதல் நீங்கள் என்பது நான் என்று மாறி விட்டீர்கள். ஏனெனில் இங்கே இத்தனை நபர்களை தாண்டி என்னிடம் மட்டும் நீங்கள் வரக்காரணம் அதுதான். இனி நான் முதலில் டாக்டரை சந்தித்தால் அவர் நான் ஆகி விடலாம். அல்லது நான் டாக்டராகி விடலாம்… என்றார்.
நான் வாயை இறுக்க மூடிக்கொண்டேன்.
இனி பேசினால் நீயூயோர்க்கர் என்னை எந்த முடிவுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால் அவர் என்னை பார்க்கும் போது அவர் எதை சொன்னாலும் நான் அதை அப்படியே மறுப்பு இன்றி அனைத்தையும் ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையை வைத்துக்கொண்டேன். வேறு இடத்துக்கு இருக்கை மாறி போவதும் நாகரீகமான ஒன்றாய் இல்லை.
விட்டத்து பேன், பல்லி என்று பார்வையை மாற்றி கொண்டேன். ஆனால் அவர் என் காதுமடல் பக்கம் மட்டுமே உற்று பார்ப்பது போன்ற குறுகுறு. குறு குறு. குறு குறு.
நீயூயோர்க்கர் சொன்னதில் என்னவோ அர்த்தம் இருப்பது போல்தான் என் மனம் தனியே யோசிக்க ஆரம்பித்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் பிய்த்து ஒட்டி கொண்டது என் மனம். எனக்கும் பொழுதும் போக வேண்டுமே?
மனதை அதன் போக்கில் போகும்படி விட்டுவிட்டு இடை தன் கையை தூக்குமா என்று ஒரு கண்ணிலும் நீயூயோர்க்கரை ஒரு கண்ணிலும் வைத்துக்கொண்டேன்.
அப்போது டாக்டர் உள்ளே வந்து லேசாய் நோட்டமிட்டபடி அறைக்குள் செல்லவும் இடையும் பின் தொடர்ந்து உள்ளே புகுந்தது. என்ன ஒரு பின்னழகு. பத்து நிமிடங்களை என் வாழ்வில் இழந்தேன்.
முதலில் என்னை இடை அழைக்க நான் நீயூயோர்க்கரிடம் சிநேகமாய் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு உள்ளே சென்றேன். அவர் என்னை பார்த்து விசித்திரமாக ஒருமுறை கண்ணடித்தது என்னவோ போல் இருந்தது.
அந்த அறை பார்வைக்கும் மனதுக்கும் வேறு வேறு போல் தெரிந்தது. மூச்சு முட்டும்
ஃபென்தடால் மணம் அறையில் கமழ்ந்து ஒரு கணம் தீவிரமாக தலைசுற்றி நின்றது.
டாக்டர் அவரின் தெய்வீக புன்னகையை உலவ விட்டார். தொடர்ந்து ப்ளீஸ் ஸிடவுன் என்றார். நொடிகளில் சில ஒடிந்தன.
டாக்டர் புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.
உங்கள் எம் டி எனக்கு மதியமே போன் பண்ணி சொல்லிட்டார். லெட்டர் கொண்டு வந்து இருக்கீங்க ரைட்? என்று சிரித்துவிட்டு உங்க பேர் கூட சொன்னார் மறந்து போச்சு சாரி… உங்க பேர் என்ன?
“பெயரை விடுங்கள் டாக்டர்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றேன்.
இதன் தொடர் உள்ளதா?
LikeLike