அப்பா நீங்க ஒரு பேய்க்கதை எழுதுங்க.
மாயம் மந்திரம் இல்லாம எழுதணும்.
சொல்லிவிட்டு பதினோரு மணிக்கு தூங்குகிறேன் என்று சென்று விட்டாள் என் மகள்.
பேய் படங்கள் எப்போதுமே நான் ஆர்வத்துடன் பார்ப்பேன். பள்ளியில் படிக்கும் காலத்தில் நிறைய ஆங்கில படங்கள் வரும். அப்போது தரை டிக்கெட் எண்பது பைசா. முறுக்கு ரெண்டு நாலணா.
பார்த்து விட்டு மறுநாள் படத்தை பற்றி நண்பர்களிடம் பேசும்போது விறுவிறுப்பை ஏற்றிக்கொண்டே இருப்பேன். அப்போதுதான் அடுத்த காட்சி போக என்னோடு கூட்டு சேர்வார்கள். நாற்பது பைசாவில் சமோசாவுடன் என் காரியம் மீண்டும் சுபமாய் முடியும்.
ஆங்கில பேய்கள் ஈவு இரக்கம் இல்லாத ஒன்று. ஆக அது பயமுறுத்தும் முன்பே அந்த பயத்தை வடிகட்ட அம்மணி யாரேனும் பாத்ரூமில் குளித்து கொண்டிருந்தால் உடை மாற்றினால் அந்த காட்சி கூடுதல் போனஸ். அதற்கென்றே ஒரு கூட்டம் வரும்.
இப்படித்தான் நான் பார்த்த ரோஸ்மேரி என்னும் படத்தில்…
**********
மணி இப்போதே 12.30 ஆகி விட்டது. தூக்கம் வேறு வருகிறது. பேய் அலையும் நேரம் அல்லவா? மாடி மற்றும் தனிஅறை இரவு இப்படி எல்லாமே பேய்களுக்கு ஜாலியான அட்மாஸ்பியர்.
நான் எழுத யோசித்து யோசித்து ஒன்றும் கிடைக்கவில்லை. சிலர் இந்த சப்ஜெக்ட்டில் எப்படி இஷ்டத்துக்கு எழுதி தள்ளுகின்றனர் என்ற யோசனை வேறு.
எனக்கும் சற்று வயதாகி விட்டதால்…
பேய் பற்றிய பயம் போயே போய்விட்டது. இந்த காலத்தில் வரும் படமெல்லாம் பாராநார்மல் என்று மனோதத்துவம் விஞ்ஞானம் உம்மாச்சி எல்லாம் கலந்து கட்டி உருமி அடித்து கிலி காட்டுகின்றனர்.
அம்மணிகள் கழுத்தில் இருந்து பாதம் வரை கவுன் போட்டுக்கொண்டு கல்யாண மெத்தை பெட்டில் அமர்ந்தபடியே தலைவிரி கோலத்தில் பல் காட்டி பயமுறுத்த பார்க்கிறார்கள். நினைக்க நினைக்க எரிச்சல்தான் வந்தது.
அந்த காலத்தில் ஈவில்டெட் கூட…
ஒரு நிமிடம் பொறுங்கள். இப்போது சின்னதாய் நினைவுக்கு வருகிறது.
ஆம்…அவள்…குல்கர்னி…இல்லை இல்லை குல்கர்னி 2010களில்…இது நடந்தது 90களில்…
அப்போது கல்லூரியில் வேலை பார்த்து வந்தேன். நூலகம். எஸ்.ஆர். ரங்கநாதன் அந்த நூலகம் வர மாட்டார் என்ற தைரியத்தில் எனக்கு அங்கே வேலை போட்டு சம்பளம் என்ற பெயரில் நித்தியபடியும் போட்டு கொடுத்தார்கள். முதலாளிகள் நம்பிக்கையை நான் காப்பாற்றி கொடுப்பவன். ஒன்பது மணிக்கு திறந்து வைத்து கொண்டால் போதும். ராசுக்குட்டி பாக்யராஜ் மாதிரி அந்த நூலகம் களை கட்டும்.
பேராசிரியர்கள் என்பவர்கள் வகுப்பை ஒப்பேற்றிவிட்டு என்னோடு ஐக்கியமாகி விடுவார்கள். எங்கள் கும்பலில் திருஷ்டி விழும். அத்தனை அந்யோந்நியம்.
ஒரு அகடமிக் இயரில் அவள் வந்தாள்.
சட்டென்று பெயர் நினைவில் வரவில்லை.
எப்படி வரும்? ஒன்றா..இரண்டா…?
காட்சிகள் கண்ணில் விரிகிறது. அன்று போலவே இன்றும் மிதக்கும் உணர்வு.
இந்த என்டார்ஃபின் அப்படியே வேலை செய்கிறது இன்னும் கூட.
சாதாரணமாக மட்டுமே அவளுடன் பேசுவேன். அவள் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன். அப்போது அந்த கோர்ஸ் சக்கை போடு போட்டது. ஸோ… மிகுந்த மரியாதைக்கு உரிய ஆசிரியர்கள் அவர்கள்.
சாதாரண தோழமையாக பரிமளித்த அந்த உறவு நாளடைவில்…டேய் உன் ஆளு வர்றா என்று சக நண்பர்கள் என் காதருகில் அழுத்தமாய் சொல்லும்போது கிர்…வந்தது. மீசை துடித்தது.
அப்போதுதான் ஒரு பேய் படம் வந்து இருந்தது. அது பற்றி எல்லோரும் பேசிக்கொண்டே இருந்தனர்.
நீங்க அந்த மூவீ பாத்தாச்சா ஸ்ரீ? என்றாள் அவள்.
இன்னும் இல்லை…நீ…நீங்க?
சும்மா நீ வா போ னே பேசுங்க. போர்மாலிட்டி வேணாம்.
ஓ…நைஸ்…
பாத்தாச்சா நீங்க?
இல்லை. ஆனா நீ எக்ஸார்சிஸ்ட் படம் பார்த்து இருக்கியா?
நோ ஸ்ரீ.
கம்ப்ளீட்டா எலெக்ட்ரோமாக்னடிக் டெக் யூஸ் பண்ணி எடுத்து இருப்பாங்க என்றேன் என்னமோ நான் என்ஜினீயர் மாதிரி.
அப்படியா? அவள் ஆச்சர்யத்தில் பூத்தாள்.
என்னமோ இவளே அந்த தியரியை கண்டுபிடித்து ராயல்டி வாங்கிய மாதிரி.
ஒரு லோக்கல் ஆதர் புத்தகத்தை வைத்து படிக்க வரும் வருங்கால தூண்களை கொன்று குவிக்கும் கலையில் மன்னி. இதையெல்லாம் அவளிடம் இப்போது சொல்வதற்கு நான் என்ன லூசா?
1972 ல வந்த படம். வில்லியம் டைரக்டர்.
கிராபிக்ஸ் ஒன்னும் கிடையாது. இந்த தியரி படம் முழுக்க பேசும்.
அவள் இடைமறித்து அந்த அறிவியலில் என்னவோ கேட்டு தொலைக்க எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது யூட்யூப் எல்லாம் அத்தனை பரிச்சியமும் இல்லை.
சட்டென்று பேச்சை மாற்ற வாலி கவிதை பிடிக்குமா என்றேன்.
கிரேட் பொயட்.
அட…நம்ம டிராக்…
வைரமுத்து என் பக்கத்து ஊர்தான்.
பார்த்து இருக்கீங்களா?
பேசியே இருக்கேன். (பொய்)
அது பற்றி சொல்லுங்க ஸ்ரீ ப்ளீஸ்…
எத்தனை பொய் அள்ளி விட்டாலும் அலுங்காமல் குலுங்காமல் கேட்டு கொண்டே இருப்பாள். இது போதாதா எனக்கு…
செமஸ்டர் லீவ் வந்தால் பேராசிரிய பெரு மக்களுக்கு இருப்பு கொள்ளாது.
நானோ நான்-டீச்சிங். ஓர வஞ்சகத்துடன் ஞாயிற்று கிழமையை ஒட்டிய லீவ் கிடைக்கும். டீச்சிங் என்றால் வாரி வழங்குவர். என் சாபங்களை பெற்றுக்கொண்டு பேராசிரிய நண்பர்கள் சொந்த ஊருக்கு பஸ் ஏறினர்.
அவள் புதிதாக சேர்ந்ததால் அவளுக்கும் லீவில் ஆப்பு வைக்கப்பட்டது. இதை
அவள் சோகம் தெறிக்க என்னிடம் சொல்லும்போது அப்போதைய என் முகத்தை நீங்கள் கற்பனை செய்ய வேண்டும்.
உள்ளே மிருகம். வெளியே தெய்வம்.
அந்த விடுமுறை நாட்களில் யாரும் இல்லாத கடையில் டீ ஆற்றும் வேலைதான் எனக்கு.
கல்லூரிக்கு செல்லும் கையோடு கணையாழி, காலச்சுவடு, புதிய எழுத்து இன்னும் சில புத்தகங்கள் எடுத்து கொண்டு போய் விடுவேன்.
வர வர நீ மின்னிட்டு இருக்கடா என்ற ஒரேயொரு பொறாமை கொண்ட நண்பன் கூடவே இருந்தான். அவன் ஏன் ஊருக்கு போகவில்லை என்று நீங்கள் கேட்டால் இப்போ அது ரொம்ப முக்கியமா என்ற பதிலையும் நீங்களே சொல்லி கொள்ளுங்கள்.
அவள் காலையில் நூலகத்துக்கு வந்துவிடுவாள். கொஞ்ச நேரம் பேப்பர் பார்த்து விட்டு பின் என்னிடமிருக்கும் புத்தகங்களை வாங்கி கொண்டு படிக்க ஆரம்பிப்பாள்.
எப்படி ஸ்ரீ இதுவெல்லாம் படிக்கறீங்க?
எனக்கு இதில் ஒன்னும் புரியவில்லை என்றாள். இப்போது புரிகிறதா நான் ஏன் புரியாத கவிதை எழுதுகிறேன் என்று…
அவளுக்கு புரிய வைக்க முயற்சி செய்தேன். அதை கேட்டு கேட்டு ஆச்சர்யம் கொள்ளும் அவள் முகம் பற்றி சொல்ல வேண்டும். வேண்டாம் சொன்னால் சுமி கமெண்ட் பாக்ஸில் ஜொள்ளை குறை என்று எழுதி நாக்கை துருத்துவார்.
பேசிக்கொண்டே இருந்தோம். நொடிகள், மணிகள்,நாட்கள் அருமை அருமை என்று உண்மையாகவே சொல்லும்படி கழிந்தன.
அவள் கால்களில் மஞ்சள் மின்னும்.
நீ எப்பவும் மஞ்சள் தேச்சுப்பியா..
ம்.
என்ன சோப் யூஸ் பண்ணுவே?
பியர்ஸ். நீங்க ஸ்ரீ?
லைஃப்பாய். பரம்பரை பரம்பரையாக அதுதான் எங்கள் வீட்டில். ஆனால்
அதை நான் சொல்வேனா…அப்போது பார்த்து விலை உயர்ந்த சோப்பின் பெயர் நினைவுக்கு வரவில்லை. வாய்க்கு வந்ததை சொல்ல நினைத்து லக்ஸ் என்றேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.
எனக்கு இந்த காஸ்மெடீஸ் அறிவு சுத்தமாய் கிடையாது. பாண்ட்ஸ் பவுடர் விட்டால் உலகில் வேறு ஒன்றும் இல்லை என்று நினைத்த காலம்.
அப்படி வளர்ந்து அப்படியே என்னையும் வளர்த்த குடும்பத்தில் வந்த என்னால் எவ்வளவுதான் போராட முடியும்?
ஏன் கூடாதா? கெத்தாய் கேட்டேன்.
இல்ல ஸ்ரீ. கேட்டேன் என்றாள்.
இனி சுதாரித்து கொள்ள வேண்டும்.
அவளை கவிதைக்குள் இழுத்து கொண்டு போனேன். உலக கவிஞர் பட்டியல் எப்போதும் என்னிடம் இருக்கும்.
பேசிக்கொண்டே இருந்தபோது ஒரு நாள் கேட்டேன்.
காதல் பற்றி என்ன நினைக்கிறே?
அவள் ஒரு வினாடி என்னை பார்த்து மிக மெதுவாய் தலை கவிழ்ந்தாள்.
நீங்கள் கற்பனை கூட செய்யமுடியாது வாசகர். அக்கணம் நான் தனித்தனி ஸெல்லாய் உதிர்ந்து கொண்டிருந்தேன்.
அவளிடம் ஒரு நடுக்கம் விரவியது. அவள் விரலால் எதுவோ வரையவும் சட்டென்று புன்னகைக்கவும் செய்தாள். ஒரு ஆழ்ந்த பெருமூச்சை அவள் இழுத்து விட்டதும்….
அடேங்கப்பா…நிரம்பி விட்டேன்.
நாங்கள் எழுந்து கேன்டீன் சென்றோம்.
வறுமையின் நிறம் சிகப்பு படத்தில் சிப்பி
இருக்குது பாடல் கேட்டது. ஆனால் கைகள் உரசவில்லை. தனியே தள்ளியே நடந்து வந்தாள்.கள்ளி.
ஸ்ரீ, நான் நாளைக்கு ஊருக்கு போய்ட்டு வெகேஷன் முடிச்சிட்டு வரேன்.
உனக்கு லீவ் கிடைச்சிடுச்சா…
ம். ஆபிஸில் சொன்னாங்க.
ஒரு வாரமா லீவ் உனக்கு?
ம். எஸ் ஸ்ரீ.
உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன்.
பண்ணுங்க.
நீ எப்படி?
நானும் மிஸ் பண்ணுவேன்.
போய் விட்டாள்.
நான் மேசையை துடைத்து கொண்டு தந்தி படித்து காலத்தை ஓட்டினேன்.
************
ஒரு சுபயோக சுப தினத்தில் நாங்கள்
எல்லோரும் விடுமுறை முடிந்து போக ஒன்றாக கூடினோம்.அந்த விடுமுறை வழக்கம் போல் ஒரு பிரயோஜனமும் இல்லாது வெட்டி பொழுதாக கழித்து விட்டு மீண்டும் கூடினோம்.
ஆனால் அவள் மட்டும் வரவில்லை. நான் அவளை தேடிக்கொண்டே இருந்தேன்.
எங்கடா உன் ஆளு என்று கேட்டவர்க்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தபோதும் கொஞ்சம் பெருமையாய் சிறப்பாக என்னால் அப்போது உணர முடிந்தது.
ஆனால் அவள் பின்னும் வரவில்லை. நாட்கள் முதலில் தடுமாறினாலும் பின் அது தொடர்ந்து சென்றது. வேறு கல்லூரிக்கு கூட அவள் போக முடியும். ஆனால் லீவ் என்ற ஒன்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின.
************
இந்த கதையில் க்ளைமாக்ஸ் என்று ஒன்றும் கிடையாது.
அவளுக்கு ஆக வேண்டியது ஆகி இருக்கும். ஏதேனும் பங்களாகாரன் சிங்கப்பூர்வாசி கார்க்காரன் அப்படியே அள்ளிக்கொண்டு போய் இருப்பான். பியர்ஸ் சோப்பு வாங்கும் செலவு மிச்சம். மஞ்சள்பொடி விலையும் எகிறி விட்டது.
அவள் அப்பன் வந்து அவளுடைய சான்றிதழ்களை வாங்கி கொண்டு போய் விட்டான்.
அந்த நாளில் என் நண்பர்கள் சரக்கடிக்க நான் ஒரு காரணம் ஆனேன். டேய்..விடுடா நெப்போலியனை வச்சு நைட் பஞ்சாயத்து பண்ணிக்கிடலாம். சரக்கு உள்ளே போனா வசந்தி வாந்தியா வந்துடவா… எல்லாம் மறந்து போய்டும்.
அழுகையே வராத என்னை அன்று இரவெல்லாம் குமுறி குமுறி அழ வைத்து பார்த்தனர். அவர்களோடு பழுத்த குடியாய் கிடந்தபோது சங்கரன் என்னிடம் சில விவரங்கள் கேட்டான்.
உங்களுக்குள் நல்லா அப்படி சூப்பரா ஓடிட்டு இருந்துச்சு. என்னதாண்டா ஆச்சு. நீ அவகிட்டே சொன்னியா இல்லையா…
என்ன சொல்லணும் சங்கரா?
ஐ லவ் யூ னு சொன்னியா?
காதல் பத்தி என்ன நினைக்கிறே னு கேட்டேன்
அப்பறம்…
அவ வெக்கப்பட்டாடா…
அப்பறம்…
டீ குடிக்க போனோம்.
அப்பறம்…
சிப்பி இருக்குது முத்துமிருக்குது பாட்டு டீக்கடையில் கேட்டுச்சு
அப்பறம்…
அவ்ளோதாண்டா…
இந்த உன்னதமான காதலை புரிஞ்சுக்க தெரியாத அவ பொம்பளையே இல்ல.
உனக்கு தேவையே இல்லை.
நீ பேசாம இரு. கவலை விடு.என்றான்.
நண்பர்கள் எல்லாம் முடிந்து எழுந்தனர். நடக்க முடியாது நிற்க முடியாது ஆடிக்கொண்டிருந்த என் சட்டை மற்றும் பேண்ட்டில் வெளி உள் பாக்கெட்டுகளில் பையில் தாராளமாய் கை விட்டு மூவாயிரம் ரூபாயை அள்ளி எடுத்து பில் கட்டிவிட்டு பரம திருப்தியோடு வந்த
காமாட்சி என் காதருகில் சொன்னான்.
“டேய்…சிவில் ல ஒரு சூப்பர் பிகர் வந்துருக்கு. கரெக்ட் பண்ணினா இந்த ஆவணியில் அவளை உனக்கு பேசி முடிச்சிடலாம்.”
************
அட பாவமே வசந்தமான வசந்தியை மிஸ்ஸஸ் ஆக்காமல் மிஸ் பண்ணி விட்டீர்களே நண்பரே .
LikeLiked by 1 person